மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம் : மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் -மஹிந்த ராஜபக்ஷ முள்ளிநியூஸ்

மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம் : மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் -மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களையும் எதிர்க்கிறார்கள். பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம். மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்..... 




பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..... 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,:- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை உண்டு என்பது மே தின கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சிறந்தவர்கள் என்றும் எம்முடன் உள்ளார்கள்.....

பிரதி அரசியல்வாதிகள் தமது அரசியல் பிரபல்யத்துக்காக எங்களை விமர்சிக்கிறார்கள். இதற்காக நாங்கள் கலக்கமடைய போவதில்லை. உரிய நேரத்தில் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுப்போம். உழைக்கும் மக்களின் தொழில் உரிமைகளை பாதுகாக்க என்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம். 

உழைக்கும் அடிமட்ட மக்கள் தான் எமக்கு என்றும் முன்னிலை ஆதரவு வழங்கியுள்ளார்கள். என்றும் ஆதரவு வழங்குவார்கள். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை நான் முழுமையாக தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளேன். அதிகாரத்துக்காக நான் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படவில்லை.தவறான தீர்மானங்களை தற்போது திருத்திக் கொண்டுள்ளோம். நாடு என்ற ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொண்ட வேளையில் தான் ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்றேன். சவால்களை கண்டு,நானும் எனது தரப்பினரும் ஒருபோதும் பின்வாங்கவில்லை.பல்வேறு சவால்களில் இருந்து மீள்வதற்கு மக்கள் எமக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். 

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சகல தொழிற்சங்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் தொழிற்சங்கத்தினரை தவறாக வழிநடத்துகிறார்கள்.எம்மை திருடர், திருடர் என விமர்சிப்பவர்களின் பின்னணியை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சவால்களை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு பலமுறை அழைப்பு விடுத்தோம்.அப்போது எவரும் முன்வரவில்லை. ஆனால் தற்போது கடுமையான எதிர்ப்புக்களை முன்வைக்கிறார்கள்.

அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாத காரணத்தினால் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை தற்போது கடுமையாக விமர்சிக்கிறார்கள். நாட்டின் தேசியத்தை இல்லாதொழிக்க ஆரம்ப காலத்தில் சர்வதேச சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதற்கு பல விடயங்கள சான்று பகிர்க்கின்றன. மக்களுக்காக ஆட்சியை கைப்பற்றவும்,மக்களுக்காக ஆட்சியை விட்டுக் கொடுக்கவும் அரசியல்வாதிகள் பழகிக் கொள்ள வேண்டும்.பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம். 

மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள்.தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றார்.







செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW