” ஜப்பானில் கல்வி முறை சிறப்பாக இருப்பது ஏன்?..!! இதோ 10 இலகுவான காரணங்கள்

10 காரணங்கள் இதோ!!பணிவும் மனவுறுதியும் கொண்ட மகிழ்ச்சியாக வாழும் மனிதர்கள் என்று கூறினால் அதற்கு முன்னுதாரணமாக திகழ்பவர்கள் ஜப்பானியர்கள்தான். உலகம் அவ்வாறுதான் அவர்களைப் பார்க்கிறது. இவ்வாறான பண்புகள் சிறுவயது முதலே ஜப்பானிய சிறார்களுக்கு ஊட்டப்படுகின்றது. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் பாடசாலையாகும்.

அமெரிக்க பாடசாலைக் கல்விக் கட்டமைப்பு போன்று பாலர் கல்வி, ஆரம்பப் பாடசாலை, கனிஷ்ட உயர்நிலைப் பாடசாலை மற்றும் உயர்நிலைப் பாடசாலை என வெளிப்படையாக தோற்றமளித்தாலும் அவற்றின் உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டதாகும்.
ஜப்பானியப் பாடசாலைகள் தனித்துவமானவை என்பதை அழுத்தியுரைக்கும் பத்துக் காரணங்கள் காணப்படுகின்றன. இதனால்தான் ஜப்பானியக் கல்வி முறை வியப்பினையும், பொறாமையினையும் ஏற்படுத்தியுள்ளது.
1. பரீட்சைக்கு முன்னர், நடத்தைப் பாங்கினை சிறுவர்கள் கற்றுக்கொள்ளல்.
ஆரம்பப் பாடசாலையில் உள்ள மாணவர்கள் அவர்களது பிரதான பாடங்களை படிக்குமாறு துளைத்தெடுக்கப்படுவதில்லை. விழுமியங்கள் ஒழுக்கம் தொடர்பிலேயே அவர்களது கவனம் திருப்பப்படுகின்றது.
மென்மையாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது எவ்வாறு என மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. இரக்கம் மற்றும் பரந்த மனதுடன் நடப்பது தொடர்பிலும் வழிகாட்டப்படுகின்றது.
சுய கட்டுப்பாடு, நீதியாக நடந்துகொள்ளும் முறை சம்பந்தமாக அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. இவ்வாறான அடித்தளங்கள் இடப்பட்டால் மாத்திரமே கனிஷ்ட உயர்நிலைப் பாடசாலை மற்றும் உயர்நிலைப் பாடசாலைக் கல்வியில் பிரதான பாடங்களில் சிறந்த அடைவினை அந்த மாணவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2. பாடசாலைத் தவணை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பம்
ஜப்பானில் பாடசாலைக் கல்வியாண்டு வசந்தகால தொடக்கத்தோடு ஆரம்பமாகிறது. இந்தக் காலத்தில்தான் ஜப்பானில் சகுரா செர்ரிப் பூக்கள் பூத்துக் குலுங்கும். பனிக்காலம் முடிவடைந்து ஏற்படும் வசந்த காலத்தில் பிள்ளைகள் சீரான சிந்தனையுடனும் புத்துணர்ச்சியுடனும் பாடசாலைக்கு செல்வார்கள் என்பது அங்கு நிலவும் நம்பிக்கையாகும்.
உலகின் பல நாடுகளுக்கு ஜப்பானிய நேரசூசி பொருந்தாமல் இருப்பது இயல்பானதுதான் ஏனென்றால் சில நாடுகளில் பாடசாலைத் தவணை கோடைகால முடிவிலோ அல்லது இலையுதிர்காலத்தின் ஆரம்பத்திலோ தொடங்கப்படுகின்றன. எவ்வாறெனினும் முடியுமான அளவில் ஜப்பானிய முறையைப் பின்பற்ற முயற்சிப்பது பொருத்தமானதாகும்.
3. பாடசாலையின் துப்பரவு பணிகள் அனைத்தையும் மாணவர்களே செய்கின்றனர்.
பாடசாலையின் துப்பரவுப் பணிகளில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் நோக்கம் இயற்கையான வேலை ஒழுக்கம் தொடர்பில் மாணவர்களின் மனதில் பதிய வைத்தலாகும்.
அவர்கள் தம்மை குழுக்களாக வடிவமைத்துக் கொண்டு குறித்த வேலையினை சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஒத்துழைப்பு மற்றும் முயற்சிகளினூடாக என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டோம் என்பதை தமது மனதில் பதிவு செய்து கொள்கிறார்கள். அவர்கள் வகுப்பறைகளை மாத்திரம் துப்பரவு செய்வதில்லை, சிற்றுண்டிச்சாலை மற்றும் கழிவறைகளைக்கூட துப்பரவு செய்கின்றார்கள்.
இறுதியாக மாணவர்கள் பாடசாலையில் அங்குமிங்கும் கழிவுகளை போடுவதைத் தவிர்த்துக்கொள்வதில் மிகக் கவனமாக இருப்பதோடு தூய்மையை விரும்புபவர்களாகவும் மாறுகின்றனர். சிறுவயதில் எமக்கு இவ்வாறு துப்பரவு செய்யுமாறு கூறியிருந்தால் நாம் கோபப்பட்டுத்தான் இருப்போம். ஆனால் இப்போது, எம்மையும் அவ்வாறான பணிகளில் ஈடுபடுத்தாது விட்டுவிட்டார்களே என்று எம்மில் பலர் நிச்சயமாக நினைப்போம் என்பது மாத்திரம் உண்மை.
4. வகுப்பறையிலேயே உணவு உட்கொள்ளல்
ஜப்பானியர்களைப் பொறுத்தவரை உணவு உட்கொள்ளுதல் என்பது முக்கியமான சமூக செயற்பாடாகக் கருதப்படுகின்றது. மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட சம போஷணையுள்ள ஒரே வகையான உணவினை ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் உட்கொள்கின்றனர்.
இந்த செயற்பாடு மாணவர்களுக்கிடையே நல்ல பிணைப்பினையும் மேசையில் அமர்ந்து சாப்பிடும் ஒழுக்கத்தினை கற்றுக்கொள்ளவும் வழிவகுக்கின்றது. உணவு உண்பதற்கு முன்பதாக அனைவரும் நன்றி சொல்லி (அடாடாக்கிமசு) ஆரம்பித்து நன்றி சொல்லி (கொஷீசோசமா டெஷிடா) முடித்துக் கொள்கின்றனர்.
அவர்கள் சாப்பிடும் உணவுக்காக பூமிக்கும், அந்த உணவுக்கும், அதனை சமைத்தவருக்கும், அவர்கள் அமர்ந்து உணவருந்தும் மேசையில் தங்களோடு இருக்கும் சமூகத் தலைவர்களுக்கும் மிகப் பணிவான நன்றியைச் சொல்லும் முறையே அடாடாக்கிமசு, கொஷீசோசமா டெஷிடா ஆகிய இரு சொற்றொடர்களுமாகும்.
5. அனைத்து உயர்நிலைப் பாடசாலை மாணவர்களும் புறக்கிருத்திய செயற்பாடுகளில் மகிழ்வுடன் ஈடுபடுதல்
ஜப்பானிய சிறுவர்கள் வேலைகளில் ஈடுபடுவதில்லை, அவர்களுடைய வேலையே விளையாடுவதுதான். எனவே, பாடசாலை நேரம் எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்றுதான் பாடசாலை முடிந்த பின்னர் இருக்கும் நேரமும் அவர்களுக்கு முக்கியமானது.
அவர்களது பிந்திய நேரத்தில் கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘ஜுகு’ தனியார் பாடசாலைகளுக்கோ அல்லது பாடசாலையிலுள்ள விளையாட்டு மற்றும் இசைக் கழகங்களுக்கோ செல்வர்.
ஒவ்வொரு கனிஷ்ட உயர்நிலைப் பாடசாலை மாணவனும், மாணவியும் நீச்சல், மேசைப் பந்து, பேஸ் போல், பேண்ட் வாத்தியம், செஸ் போன்ற ஏதேனும் ஒன்றினைத் தெரிவு செய்கின்றனர். பின்னர் பிற்பட்ட தமது பாடசாலைக் காலங்களில் அந்தக் கழகத்தில் தமது ஆற்றலை மென் மேலும் வளர்த்துக் கொள்கின்றனர்.
தத்தமது குழுக்கள் மூலமாகவே அவர்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் தமது அதிகமான வார இறுதி நாட்களை ஒன்றாகவே கழிக்கின்றனர்.
6. சிறுவர்களுக்கு அழகான கவிதைகளும் எழுத்தணியும் கற்பிக்கப்படுகின்றன
ஜப்பானியர்கள் ஒருபோதும் தமது பாரம்பரிய கலை வடிவங்களை மறந்து விடுவதில்லை. எனவே கன்ஜி (இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீன எழுத்துருக்கள்), ஹிரகனா மற்றும் கட்ட கனா (இரண்டு சுதேச எழுத்து முறைமைகள்) ஆகியன அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு எழுத்துக்களையும் எவ்வாறு எழுத வேண்டும், சரியான திசையிலும் ஒழுங்கிலும் கோடுகளை எவ்வாறு கீற வேண்டும் என்பதை அனைத்து மாணவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் இந்தச் செயற்பாடுகளுக்கு மூக்கில் குச்சிகளையும், மெல்லிய கடதாசிகளையும் பயன்படுத்துகின்றனர் செழிப்பான இலக்கிய தொன்மைவாய்ந்த ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் மாணவர்களால் வாய்மொழியாகக் கூறப்பட்டு மனப்பாடம் செய்துகொள்ளப்படுகின்றன.
இதன் மூலம் ஒவ்வொரு மாணவனும் தமது கலாச்சாரப் பூர்வீகத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கின்றான்.
7. பாடசாலையிலும் பாடசாலைக்கு வெளியேயும் சீருடைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
கனிஷ்ட உயர்நிலைப் பாடசாலை தொடக்கம் பாடசாலை சீருடை அணிய வேண்டியது கட்டடாயமாகும். அனைத்து மாணவர்களும் ஒரே விதமான ஆடையினை அணிவதால் சமூக ரீதியான அனைத்து தடைகளும் களையப்பட்டு, பாடசாலைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக அவர்கள் ஒவ்வொருவரும் மாறிவிடுகின்றனர்.
அதேபோன்று சிகை அலங்காரமும் ஒரே மாதிரியானவையாகக் காணப்படும். மாணவர்கள் தமது முடியினை கட்டையாக வெட்டியிருக்க வேண்டும், அதேவேளை மாணவிகள் தமது கூந்தலை நடுத்தர அளவிற்கு வைத்து ஓரங்களை வெட்டிவிட வேண்டும். வெளி இடங்களில் மக்களால் மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதில்லை. மதிக்கப்படுகின்றனர்.
அதன்மூலம் தலைமுறைகளுக்கிடையே நல்லெண்ணம் உருவாகின்றது.
8. பாடசாலைகளுக்கு செல்லாது விடுதல் 0.01 வீதமாகும்
ஜப்பானில் பாடசாலைக்கு மாணவர்கள் சமுகமளிக்காதிருத்தல் என்பது மிகவும் அரிதாக நடைபெறும் சம்பவமாகும். ஒரு வகுப்பை எடுத்துக் கொண்டால், அனைத்து மாணவர்களும் சமுகமளித்திருப்பது மட்டுமல்ல, வகுப்பில் ஆசிரியர் கற்பிப்பதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பார்கள். 91 வீதமானோர் ஆசிரியர் கற்பிப்பதை முழுமையாகக் கவனிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
9. அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரு பரீட்சை
ஜப்பானில் உயர்நிலைப் பாடசாலைகள் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டவை. ஜப்பானில் உயர்நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்பவர் இத்தாலியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவருக்கு சமனான தகைமையுடையவராகக் கருதப்படுவார். எனவே கல்லூரிப் படிப்பைத் தொடரவுள்ளவர்களுக்கு போட்டி கடுமையானதாக இருக்கும்.
ஒரு பரீட்சை அனைத்தையும் தீர்மானிக்கிறது. பரீட்சையில் போதுமான தராதரத்தினைப் பெற்றால் மேற்கொண்டு கல்லூரிப் படிப்பைத் தொடர முடியும். சித்தி எய்தத் தவறும் பட்சத்தில் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியாது, ஆனால் ஜப்பானிய தொழிற் சந்தையில் பொருத்தமான தொழிலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
10. பாடசாலை மற்றும் கல்லூரிப் படிப்பின் பின்னர் ஒரு விடுமுறை
தேசிய பாடசாலை முறைமையில் கடினமான உழைப்பு தேவைப்படுகின்றது. அதில் வெற்றி பெறுவதென்பது அவர்களது வாழ்க்கையில் பெரிய வெற்றியாகக் காணப்படுகின்றது.
கல்லூரிக் காலம் முடிவடைந்ததன் பின்னர் அதிகமானோர் எண்ணிக்கொள்வது என்னவென்றால், நாம் மிகவும் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும் என்பதை விட, நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டுள்ளது என்பதாகும்.
பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் பெரும்பாலும் விரிவுரை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தூங்கிவழிவதைக் காணலாம். அதனால் தான் ஜப்பானிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச மட்டத்தில் உயர் தரத்தினை அடையவில்லை.
இதற்குக் காரணம் பாடசாலைக் காலங்களில் அவர்களது பதின்ம வயதின் ஆரம்பத்தில் கடினமாக உழைத்ததனாலாகும். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW