ஹக்கீமின் அவசர வேண்டுகோளை ஏற்று விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது...!

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அவசர வேண்டுகோளை அடுத்து குருநாகல் மும்மன்ன கிராமத்துக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றவுள்ளார்.
இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இதனை தவிர்த்து, ஞானசார தேரரின் வருகையைத் தடுத்துக் கொள்ள ஊர்ப்பிரமுகர்கள் பொலிசாரை வலியுறுத்திய போதிலும் ஞானசார தேரர் கலந்து கொள்ளும் நிகழ்வானது, தர்மோபதேச நிகழ்வு என்ற காரணம் காட்டி அதை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்திருந்தது.
சம்பவம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அவசர வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சினால் உடனடியாக விசேட அதிரடி படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மும்மன்ன பிரதேசத்தில் இன்று காலை தொடக்கம் நிலவிய கடும் பதற்ற நிலை ஓரளவுக்குத் தணிந்துள்ளது.
அத்துடன் நிலைமைகளை உடனுக்குடன் தெரியப்படுத்த முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர் சட்டதரணி ரிஸ்வி ஜவஹர்ஷா களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , தற்போது எலபடகம பிரதேசத்திலிருந்து நிலைமைகளை அவதானித்த வண்ணம், ஒருங்கிணைப்பு பணிகளை மேற் கொண்டுள்ளார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW