UNP – SLFP விரைவில் உடன்படிக்கை
தேசிய அரசாங்கத்தின் ஆட்சி எவ்வாறு எதிர்காலத்தில் அமையவுள்ளது. ஆட்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக்
கட்சியும் இணைந்துள்ள வகிபாகம் என்ன என்பது தொடர்பான விபரங்கள் உள்ளடங்கிய உடன்படிக்கையொன்று விரைவில் கைச்சாத்திடப்படப்படவுள்ளது.
தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன. தற்போதைய தேசிய அரசாங்கம் பற்றி பொது மக்கள் தெளிவற்ற நிலையில் இருப்பதனால் மக்களைத் தெளிவூட்டும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையவுள்ளது.
நேற்று மதியம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திசாநாயக்க குறிப்பிட்ட விபரங்களைத் தெரிவித்தார்.
அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரத்தைப் பெறமுடியாமற் போனதாலும் பொதுத் தேர்தலில் தான் எதிர்பார்த்த பதவியைப் பெற முடியாமற் போனதாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி எதிர்வரும் தேர்தல்களில் கட்சியைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
தனக்குக் கிடைக்காத பிரதமர் பதவி எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்து செயற்படும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமாக அமையப் போகிறது. மஹிந்த ராஜபக் ஷவின் உதவி எமக்குக் கிடைத்தால் நல்லது.
அவரது ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாம் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள், நிராகரித்தார்கள்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவரின் கருத்துகளை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. மஹிந்த ராஜபக் ஷ தொடர்ந்தும் இவ்வாறான கருத்துக்கள் அதாவது பாத யாத்திரையில் கூறிய கருத்துகளை வெளியிடுமாறு வேண்டிக் கொள்கிறேன். அப்போது தான் அது எமக்கு சாதகமாக அமையும்.
பாத யாத்திரையில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்குள் அநேக உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய செயற்குழுவே தீர்மானம் மேற்கொள்ளும் என்றார். (vid) இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
