சௌந்தர்யா ரஜினிகாந்தின் உருவப் படங்கள் எரிப்பு : பின்னணி என்ன? முள்ளிநியூஸ்

சௌந்தர்யா ரஜினிகாந்தின் உருவப் படங்கள் எரிப்பு : பின்னணி என்ன?


சௌந்தர்யா ரஜினிகாந்த் விலங்கு நல வாரியத்தின் தூதவராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சமீபத்தில், விலங்கு நல வாரியத்தின் தூதராக சௌந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டார். திரைப்படங்களில் விலங்குகள் தோன்றும் காட்சிகள் குறித்த ஆலோசனைகளை திரைத்துறையினருக்கு அவர் ஆலோசனை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அப்பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சியில் உள்ள தமிழர் வீரவிளையாட்டுப் பேரவைக் கழகமும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

ஏனெனில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று விலங்கு நல வாரியம்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. எனவே அந்த பதவியை சௌந்தர்யா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறிய அவர்கள் அவரின் உருவப் பொம்மைகளை எரித்தனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த வீரவிளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ் “முரட்டுக்காளை படத்தில் காளையை அடக்குவது போல் நடித்துதான், நடிகர் ரஜினிகாந்த் கிராமப்புற ரசிகர்களைப் பெற்றார். ஆனால் அவரின் மகள் சௌந்தர்யா விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரஜினியும் இதை வலியுறுத்தவேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW