முஸ்லிம் திருமண சட்டத்தில் கைவைப்பது, ரணில் - மைத்திரி செய்யும் துரோகம்

கட்சி தலைமையகத்தில் நேற்று இரவு அவசரமாக கூடிய உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஆட்சிக்காலத்தில் நீதி அமைச்சராக ரஊப் ஹக்கீம் இருப்பதை சாதகமாக வைத்துக்கொண்டு சியோனிச சக்திகளிடமிருந்து பணம் பெறும் சில முஸ்லிம் பெண் அமைப்பினர் முஸ்லிம் திருமண சட்டத்தில் கைவைக்க முணைந்தனர். இதற்கு அமைச்சர் ரஊப் ஹக்கீமும் ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை உலமா கட்சி மட்டுமே கடுமையாக பகிரங்கமாக கண்டித்ததால் கைவிடப்பட்டது. பின்னர் இந்த ஆட்சி ஆரம்பித்ததும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதற்காக முயற்சித்த போது இதனை செய்ய வேண்டாம் என உலமா கட்சி அவருக்கு பகிரங்க கடிதம் அனுப்பியதால் இது விடயம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அரசாங்கத்தை முறையாக கொண்டு செல்ல முடியாத ரணில் மைத்திரி அரசாங்கம் ஜி எஸ் பி வரிச்சலுகை பெறுவதற்காக முஸ்லிம் திருமண சட்டத்தை சியோனிசத்துக்கு ஏற்றாற்போல் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பது என்பது வரலாற்றில் எந்த அரசும் செய்யாத அநியாயமாகவும், இனவாதமாகவுமே உள்ளது.
நாளை இன்னொரு வரிச்சலுகைக்காக முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கூட இந்த அரசின் அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கலாம். முஸ்லிம்களின் 95 வீதமான வாக்குகளை பெற்ற இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கும் உலமாக்களுக்கும் செய்யும் நன்றிக்கடன் இதுதானா என கேட்கிறோம். இதைத்தான் உலமா கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகத்தெளிவாக சொல்லியது, அதாவது, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க முஸ்லிம்கள் ஒத்துழைப்பது என்பது சட்டிக்குள்ளிருந்து நெருப்பில் விழுவது போன்றதாகும் என. அப்போது எமது கருத்தை ஏற்காமல் எம்மை கடுமையாக சாடிய முஸ்லிம் சமூகமும் உலமாக்களும் இப்போது முஸ்லிம் திருமண சட்டத்தில் அந்நியர்கள் கை வைப்பதை பார்த்து ரசிக்கப் போகிறார்கள்.
முஸ்லிம் திருமண சட்டம் என்பது சமூகப்பற்றும் இறையச்சமும் கொண்ட நமது முன்னோர்களான உலமாக்களாலும் இஸ்லாம் பற்றிய அறிவுள்ள சட்டவல்லுணர்களாலும் குர்ஆன் ஹதீத் அடிப்படையில் வகுக்கப்பட்டதாகும். அதனை மாற்றுவது என்பது குர்ஆன் ஹதீதை அவமானப்படுத்துவதாகும். இஸ்லாமிய திருமண சட்டத்தில் குறை இருப்பதாலேயே அதனை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக முன்னர் சொல்லப்பட்ட நிலையில் ஜி எஸ் பி வரிச்சலுகையை பெறுமுகமாகவே இஸ்லாமிய திருமண சட்டத்தை அரசாங்கம் விற்க முனைந்துள்ளமையை அரசு இப்போது ஏற்றக்கொண்டுள்ளதன் மூலம் மேற்படி திருமண சட்டத்தில் தவறு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. முஸ்லிம் திருமண சட்டத்தில் எதையும் மாற்ற வேண்டிய தேவை இல்லை. மாறாக இன்னும் சில உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும். அவற்றை உலமா சபை மறறும் உலமா கட்சி என்பனவே செய்ய வேண்டும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.