சாத்தூர் அருகே ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக் கொலை!

கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், நாகர்கோவிலில் இருந்து சாத்தூர் வழியாக கோவை செல்லும் பேருந்தில் இன்று காலை சென்றுக் கொண்டிருந்தார். சாத்தூர் அருகே படந்தால் சோதனைச்சாவடி நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, மர்மநபர்கள் இருவர், கருப்பசாமியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பியோடினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கருப்பசாமி பலியானார். தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களின் உதவியுடன், போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி இரவு கோவில்பட்டியைச் சேர்ந்த அப்துல்லா என்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கருப்பசாமியின் சகோதரர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கருப்பசாமி துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்த கொடூரம் நடந்திருக்கலாம் என கருப்பசாமி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த கருப்பசாமிக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், ஸ்ரிதரணிப் பிரியா என்ற மகளும் உள்ளனர்.