இணையத்தளங்களினால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன – சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய

திட்டமிட்டு இணையத்தளங்கள் ஊடாக நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக சட்டத்தரணிகள் முன்னின்று குரல் எழுப்பவேண்டும் என சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரியவை மேற்கோள் காட்டி சிலோன் டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இணையத்தள மாஃபியா மற்றும் சில ஊடகங்கள் ஊடாக நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளதாக சிலோன் டுடே பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நீதிபதிகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இணையத்தளங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அநீதி இழைக்கப்பட்ட சில நீதிபதிகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாக சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய சிலோன் டுடே பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தமது சங்கம் இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு தொடர்பில் அறிந்துள்ளதாகவும் ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடுகள் காரணமாக நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம் ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டி சிலோன் டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் நீதிபதிகளும் 100 வீதம் சிறந்தவர்கள் என தாம் கூறவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுக்களை உரிய முறையில் முன்வைத்தால் அதன் மூலம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் விடுக்கப்படாது எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனவே பொறுப்புடன் செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடக நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. (NF)