நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வீழ்ச்சியடைகின்றது: செல்வம் அடைக்கலநாதன்
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தனர். ஆனாலும், அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் இராணுவம் உள்ளிட்ட படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றபோதும், இராணுவம் உட்பட அரச படைகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாவது நாள் விவாதம் நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகள் காரணமாகவே ஆட்சி மாற்றமொன்றுக்காக தமிழ்- முஸ்லிம் மக்கள் வாக்களித்திருந்தனர்.
வடக்கு, கிழக்கில் படையினர் தம்வசப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவித்தாலும் கூட மக்களின் நிலங்களை விடுவிப்பதில் கால தாமதம் காணப்படுகிறது. தமது சொந்த வீடுகளில் சென்று குடியமரவேண்டும் என்ற ஏக்கத்துடன் பலர் காத்திருக்கின்றனர். காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருந்தாலும், படையினர் அரசாங்கத்தின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவதில் சிக்கல் காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எவ்வாறாயினும் பொது மக்களின் நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பது அரசாங்கத்தின் கடமையாகும். எதிர்வரும் வருடத்திலாவது இதனை அரசாங்கம் நிறைவேற்றி, நல்லிணக்கத்தை நிரூபிக்க வேண்டும்.” என்றுள்ளார்.