பள்ளிவாசல் தாக்குதல்கள், முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறுபக்கம் திரும்புமா..?

ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது. இப்போது நடப்பவற்றிற்கும் அன்று நடந்தவற்றிற்குமிடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மீளவும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஒரு வார காலத்தினுள் மாத்திரம் இரு வேறு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித்துள்ளன. புறக்கோட்டை முதல் பேஸ் புக் வரை முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்கு சக்திகளின் வசைபாடல்களே பரவிக் கிடக்கின்றன.
அண்மைக்காலமாக மீண்டும் முஸ்லிம்களை சீண்டும் வகையிலான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கடந்த வாரம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டம் புறக்கோட்டை ரயில் நிலையம் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அப் பகுதிக்கு முன்கூட்டியே சிங்ஹலே அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் பதாதைகளுடன் வருகை தந்திருந்தனர்.
எனினும் பொலிசார் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை புறக்கோட்டைக்குச் செல்லாது மாளிகாவத்தை பொலிஸ் நிலையம் முன்பாகவே தடுத்துவிட்டனர். எனினும் இங்கு உரை நிகழ்த்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் ஞானசார தேரரை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களினால் தாக்கியிருந்தார்.
இவரது கருத்துக்கள் வெ ளியிடப்பட்ட அதே நேரத்தில் புறக்கோட்டையில் குழுமியிருந்த சிங்ஹலே ஆதரவாளர் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் குறிப்பாக தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராகவும் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வசைபாடியிருந்தார்.
மேற்படி இரு தரப்பு கடும்போக்கு கருத்துக்களும் உடனடியாகவே சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன. இரு தரப்பு ஆதரவாளர்களும் கருத்துக்களால் காரசாரமாக மோதிக் கொண்டனர். இக் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேலும் பல இனவாதக் கருத்துக்களும் படுமோசமான வார்த்தைப் பிரயோகங்களும் தொடராக வெளிப்பட்டன. இவை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயலாகவே அமைந்தன.
இந் நிலையில்தான் புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக சிங்ஹலே உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த புதன் கிழமை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் வாக்குமூலமளிக்க வருமாறு பொலிசார் அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கமைய குறித்த நபர் சுமார் 200 பேர் கொண்ட தனது ஆதரவாளர்களுடன் பொலிஸ் நிலையத்துக்கு வந்ததுடன் மீண்டும் ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர். இவ்வாறு ஏட்டிக்குப் போட்டியாக இன்று இனவாத கருத்துக்களும் செயற்பாடுளும் தலைதூக்கியிருக்கின்றன.
மேற்படி நிகழ்வுகளின் எதிரொலியாகவே குருநாகல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் இரு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டனவா எனும் சந்தேகமும் வலுப் பெற்றுள்ளது. எனினும் இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் எதுவும் கண்டறியப்படவில்லை.
ஒரு வாரத்திற்குள் குருநாகல் மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளிலுள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் அம் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதே மாவட்டத்திலுள்ள மும்மானை எனும் முஸ்லிம் கிராமத்தை இலக்கு வைத்து பொதுபல சேனாவின் வழிகாட்டலில் ஒரு நீண்ட கால திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை நினைவிருக்கலாம். முஸ்லிம் பாடசாலைக்கு சொந்தமான காணியை தமக்கு வழங்க கோரி இனவாதிகள் பிரச்சினையை கிளப்பினர். இதனை பயன்படுத்தி அப் பகுதி முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்கினர். இந்த திட்டம் தமக்கு பாரிய வெற்றியளித்ததாகவும் இதேபோன்று ஏனைய பகுதிகளிலும் முயற்சித்தால் பௌத்தர்களின் ஆதிக்கத்தை பரவலாக்கலாம் என்றும் சில மாதங்களுக்கு முன்னர் கொரியாவில் நடைபெற்ற சந்திப்பொன்றில் ஞானசார தேர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான திட்டங்களின் தொடரில்தான் பள்ளிவாசல் தாக்குதல்கள் இடம்பெறுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது.
இதன் காரணமாக இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இரவில் பொலிஸ் பாதுகாப்பளிக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவிடம் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோன்றுதான் அமைச்சரவையிலும் இந்த விவகாரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர நாட்டில் பௌத்த தீவிரவாதமும், முஸ்லிம் தீவிரவாதமும் தலைதூக்கியுள்ளதாக அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே போன்றுதான் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக தலைதூக்கும் இனவாதம் தொடர்பில் ஒன்றுகூடிப் பேசியுள்ளனர். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவரது கவனத்தை ஈர்க்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
குருநாகல் சம்பவங்கள் இவ்வாறிருக்க தம்புள்ளையிலும் எதிர்வரும் 19ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2012 ஏப்ரலில் இடம்பெற்ற தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரமே உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதிகம் பேசப்பட்ட பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமாகும். எனினும் இப் பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கு இணக்கம் காணப்பட்டு காணியும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் குறித்த காணியில் புதிதாக புதிதாக பள்ளிவாசலொன்றை நிர்மாணிப்பதற்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அப் பகுதி முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளதுடன் தம்புள்ளை பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு ஒன்றினைச் செய்துள்ளது.
தம்புள்ளையில் அரசாங்கம் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு காணி ஒதுக்கியுள்ள நிலையில் மேற்கொள்ளப்படவுள்ள இவ்ஆர்ப்பாட்டம் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் எனவும் சகவாழ்வினைப் பாதிக்கும் என்பதால் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்யுமாறும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்றுதான் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில், இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேச்தை அண்டிய மாயக்கல்லி மலையில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டமை அங்கு பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களையும் தமிழர்களையும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
தயா கமகே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் அவரது செயற்பாடு அம்பாறை வாழ் முஸ்லிம்களையும் தமிழர்களையும் அதிருப்தியுறச் செய்துள்ளதுடன் ஐ.தே.க. சிறுபான்மை ஆதரவாளர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அக் கட்சியின் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எம்.பிக்களுக்கும் இந்த சிலை விவகாரம் தலையிடியை கொடுத்துள்ளது. இது தொடர்பில் தயா கமகேவை எச்சரிக்குமாறு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐ.தே.க முஸ்லிம் பிரதிநிதிகள் நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.
இவ்வாறு நாட்டின் நாலா புறமும் மீண்டும் இனவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அது கடும் சொற்களாகவும் கற்களாகவும் பெற்றோல் குண்டுகளாகவும் புத்தர் சிலைகளாகவும் வெளிப்பட்டு நிற்கிறது.இந் நிலை நீடிப்பது ஆரோக்கியமானதல்ல.
எனவேதான் அரசாங்கம் இந்த விரும்பத்தகாத நகர்வுகளை கட்டுப்படுத்த உடனடியாக தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் உணர்ச்சிகளால் ஆளப்படுபவர்கள். பள்ளிவாசல் மீது எறியப்படும் கல் ஒன்றே அவர்களது தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தப் போதுமானது. ஒரு கல் இரண்டாகி பத்தாகிப் பலவாகுகையில் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் நல்லாட்சியை விட்டும் தூரமாகிவிடுவார்கள். அதனை தருணம் பார்த்துக் காத்திருக்கும் கடந்த கால இனவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
இந்நிலை தொடர்ந்தால் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறுவிதமாகவே இருக்கும். அந்த நிலைப்பாட்டை நிச்சயம் முஸ்லிம் கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் அது இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆரோக்கியமாக அமையப்போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.