சிரேஸ்ட அரசியல் வாதிகளினால் பிழையான பதில்கள் அளிக்கப்படுவதால் பாராளுமன்றக் கௌரவத்திற்கு பாதிப்பு – இம்ரான் MP முள்ளிநியூஸ்

சிரேஸ்ட அரசியல் வாதிகளினால் பிழையான பதில்கள் அளிக்கப்படுவதால் பாராளுமன்றக் கௌரவத்திற்கு பாதிப்பு – இம்ரான் MP



பாராளுமன்றத்தில் கேட்கப்படும் வாய்மூல வினாக்களுக்கு சில அமைச்சர்கள் பிழையான புள்ளிவிபரங்களுடன் பதில் அளிப்பதால் பாராளுமன்றத்தின் கௌரவம் பாதிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 11 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட திவிநெகும பணிப்பாளர் நியமனம் தொடர்பாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவிடம் நான் சில கேள்விகள் கேட்டிருந்தேன். அவர் பாராளுமன்றத்தில் அளித்த பதிலில் பிழையான தரவுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது 3 ஆம் தரத்திலுள்ள ஒரு உத்தியோகத்தரை முதலாம் தர உத்தியோகத்தகத்தர் என்று அவர் குறிப்பிட்டதோடு அதன் அடிப்படையிலேயே அந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அதேபோல முதலாம் தரத்தில் உள்ள உத்தியோகத்தர் ஒருவரை 2ஆம் தர உத்தியோகத்தரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தவறுகள் குறித்து பின்னர் நான் அவருக்கு எடுத்துக் கூறியபோதும் அவற்றை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை

உயர்ந்த கௌரவமிக்க பாராளுமன்றத்தில் பிழையான பதில்கள் அளிக்கப்படுகின்றமையையிட்டு நான் மிகவும் கவலையடைகின்றேன். இது போன்ற பிழையான பதில்கள் பாராளுமன்றம் மீது நம்பிக்கை இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி விடும் என்பதோடு நாட்டையும் நாட்டு மக்களையும் தவறான வழிக்கு இட்டுச் சென்று விடும்.

புதிய பாராளுமன்ற உறுப்பினராகிய நான் நேர்மையாக அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்புகின்றேன். அதற்காக சிரேஸ்ட அரசியல்வாதிகளின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பில் உள்ளேன். பாராளுமன்றத்தை மிகவும் உயர்ந்த கௌரவமிக்க சபையாகக் கருதுகின்றேன். இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் சிரேஸ்ட அரசியல்வாதிகளினால் பிழையான பதில்கள் அளிக்கப்படுவது என்னை மிகவும் கவலை கொள்ள வைத்துள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW