“இனவாதத்தால் யாருக்கும் நன்மையில்லை” ஞானசார திடீர் மன மாற்றம்? (video)
இலங்கையின் புத்தசாசனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நீண்டநாட்களாகத் தாமும் தம்மைப் போன்று ஏனைய பௌத்த துறவிகளும் மேற்கொண்டு வந்த போராட்டத்துக்குப் பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் பொதுபல சேனாவின் ஞானசார.
நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தி ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஆறு சுனாமியாக மாற முன்பதாக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்ததனைத் தொடர்ந்து புத்தசாசன மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஞானசார இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதுவரை காலமும் தமது எதிர்பார்ப்புகளை அல்லது பிரச்சினைகளைப் பேசுவதற்கான இடமொன்று இருக்கவில்லையெனவும் அமைச்சர் விஜேதாச உடனடியாக அந்த வாய்ப்பைத் தந்ததோடு தமது பிரச்சினைகளுக்கு செவிமடுத்து கலந்துரையாடல் மூலம் தீர்வொன்றைக் காண்பதற்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் இதனடிப்டையில் தாம் அவர் மீது நம்பிக்கை வைத்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுவரை காலம் தாம் முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என திட்டுவதும் அவர்கள் தம்மை இனவாதிகளாக அடையாளப்படுத்துவதுமான போராட்டம் இடம்பெற்று வந்ததாகவும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி சில வருடங்களாக சமூகங்களுக்கிடையில் பாரிய பிளவுகளும சந்தேகங்களும் உருவாகியுள்ளதாகவும் இதில் எந்தப் பக்கத்துக்கும் வெற்றி கிடைக்கவில்லையெனவும் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இந்த நிலை மாறக்கூடிய வகையிலான கலந்துரையாடல் மூலமான பொறிமுறை ஏற்படவுள்ளதாகவும் அதன் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்பிக்கை வைத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.