பௌத்தம் அழிகிறது, முக்கிய இனவாதிகளை உதவிக்கு அழைக்கும் ஞானசாரா..! முள்ளிநியூஸ்

பௌத்தம் அழிகிறது, முக்கிய இனவாதிகளை உதவிக்கு அழைக்கும் ஞானசாரா..!


பௌத்த மதத்தை அழிப்பதற்கு நான்கு புறத்திலும் சூழ்ச்சி செய்யப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டையும், இனத்தையும், பௌத்த மதத்தையும் அழிப்பதற்கு நான்கு திசைகளிலிருந்தும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.

சிறு சிறு பேதங்களை களைந்து அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து எழுந்து நிற்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தேசியத்துவத்திற்குள் உள்ள தலைவர்களை இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு இது பற்றி கூறி பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் சொல்ல முடியாத பாவ காரியமொன்றின் பங்குதாரர்களாகிவிடுவோம்.

இந்த தேசிய பிரச்சினையின் போது அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள பொதுபல சேனா விரும்புகின்றது. அதுரலிய ரதன தேரரின் குரலும் தற்போது தேவைப்படுகின்றது.

சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் ஆகியோர் இல்லாமல் இருந்திருந்தால் போரை வெற்றிகொண்டிருக்க முடியாது.

மஹிந்த, கோதபாய ஆகியோர் போரை வென்றெடுக்க வழங்கிய பங்களிப்பினை பாராட்டுவது போலவே சம்பிக்க, ரதன தேரர் போன்றவர்களின் பங்களிப்பும் வரவேற்கப்பட வேண்டியது.

தேசியத்துவத்தை எழுப்பி போருக்கான உந்துதலை சம்பிக்க , ரதன தேரர் போன்றவர்கள் வழங்கினார்கள்.

மஹிந்த ராஜபக்ச, கோதபாய ராஜபக்ச, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன போன்றே சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் ஆகிய தேசியத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்கள் பல்வேறு அரசியல் பிரவாகங்களை பிரதிநிதித்துவம் செய்தாலும் தற்போதைய சூழ்நிலையில் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

சிங்களவர்களை பிளவடைச் செய்து எமது சிங்களத் தலைவர்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்ள சில சக்திகள் சூழ்ச்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW