முஸ்லிம் – தமிழ் மக்களும் எங்களோடு இணைய வேண்டும்: ஞானசார
நல்லாட்சியின் கீழ் அரசியலமைப்பு மாற்றம் பெறுவதற்கு முன்பதாகவே புதிய நாடொன்று உருவாகி விட்டது என தெரிவித்துள்ளார் பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசார.
இன்று நாட்டில் இனங்களுக்கிடையில் ‘எதுவித’ பிரச்சினைகளும் இல்லை, ஒற்றுமை ஓங்கி நாடு செழிப்புடன் இருப்பது போன்ற மாயை ஊடகங்கள் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள மக்களின் புராதன தளங்கள் அழிக்கப்படுகின்றமை, சிங்கள மக்கள் குடியிருப்புகளிலிருந்து விரட்டப்படுகின்றமை குறித்து யாரும் கவனத்திற்கொள்ளவோ கவலைப்படுவதாகவோ இல்லையெனவும் மேலும் தெரிவித்துள்ள அவர், தாம் மிகவும் ‘அமைதியாகவே’ மட்டக்களப்புக்கு சென்றதாகவும் அதுவும் மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுமனரத்ன தேரருக்கு ஆறுதலளிக்கவே அப்பயணத்தை ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமது அடிப்படை மனித உரிமையும் மறுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், புதிய அரசியலமைப்பை உருவாக்கி மேலும் பிரிவினைகளை உருவாக்க அரசாங்கம் முனைவதாகவும் இதற்கெதிரான தமது போராட்டத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.