வேலைத்திட்ட பிரகடனம் பிரதமரால் இன்று வெளியீடு
பலம் மிக்கதோர் இலங்கை ,திட்டமிட்டதோர் பயணம், அனைவருக்கும் நன்மை பயக்கும் ஓர் பொருளாதாரம் எனும் கருப்பொருளின் கீழான வேலைத் திட்ட பிரகடனத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(04) புதன்கிழமை மாலை வெளியிடுகிறார்.
ஜனாதிபதி பதவியேற்று இரண்டாண்டு பூர்த்தியடைவதை முன்னிட்டு "பேண் தகு யுகம்- மூன்றாண்டு ஆரம்பம்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொருளாதார திட்டத்தை பிரதமர் இன்று மாலை 2.30 மணிக்கு அலரி மாளிகையில் வெளியிடவுள்ளார்.
அனைவருக்கும் தொழில்வாய்ப்பு, சமமான வாழ்க்கை முறை, உணவில் தன்னிறைவு, மனித வள மேம்பாடு, பலம்மிக்க டிஜிட்டல் பொருளாதார உருவாக்கம், உள்ளிட்ட பல்வேறுபட்ட பொருளாதாரத் திட்டங்களை உள்ளடக்கியதாக இந்த வேலைத் திட்டம் அமையப்பெற்றுள்ளது.
முழு நாட்டையும் உள்வாங்கியதாக இந்த பொருளாதாரத் திட்டம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டை மூன்று வாயில்களாக மையப்படுத்தி தென், மேற்கு பொருளாதார வாயில், வட, கிழக்கு பொருளாதார வாயில், மலை நாட்டு உப பொருளாதார வாயில் என வகுக்கப்பட்டுள்ளது.
எம்முன்னுள்ள சவாலை வெற்றிகொண்டு பலம் மிக்கதோர் இலங்கை நாட்டை உருவாக்குவோம். எனும் இத்திட்டம் எமது நாட்டை ஆசியாவின் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றியமைக்கும் இலக்கினை கொண்டதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.