சவுதி மன்னர் மீண்டும் அதிரடி, இளவரசர் கைது (வீடியோ)
சாமானியர் ஒருவரைத் தாக்கிய சவுதி இளவரசர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சவுதியில், புதன்கிழமை அன்று சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் முன் காரை நிறுத்திய ஓட்டுநரை முகத்தில் அடிப்பது போலவும் ரத்தம் வழிவதுமான காட்சி இடம் பெற்றிருந்தது. மற்றொரு காட்சியில், சேரில் அமர்ந்துள்ள ஒருவரின் மார்பில் காலால் மிதிப்பதும் துப்பாக்கியை வைத்து மிரட்டுவது போன்றும், விஸ்கி பாட்டில்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன. சவுதியில், மதுவுக்குத் தடை இருக்கிறது. இந்த வீடியோவை ஒரே நாளில் 7,60,000 பேர் பார்த்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதையடுத்து, குடிமக்கள் உரிமைக்கு முன்னுரிமை கொடுக்கும் மன்னர் சல்மான், சம்பந்தப்பட்ட இளவரசரைப் பிடித்து உடனடியாகச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் அந்த இளவரசரை நேற்று கைதுசெய்தனர். முகமூடி அணிவித்து அவரைக் கைதுசெய்து அழைத்துப் போகும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. 'நீங்கள் யாராகவும் இருந்துவிட்டுப் போங்கள். சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை' என மக்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
நீதிமன்றத்தில், வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மை ஆராயப்பட உள்ளது. நண்பரைச் சுட்டுக் கொன்ற மற்றொரு சவுதி இளவரசருக்கு, ஆறு மாதத்துக்கு முன் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிகப் பேருக்கு மரண தண்டனை விதிக்கும் நாடு, சவுதி அரேபியாதான். இங்கு, இஸ்லாமிய சட்டமுறையே கடைபிடிக்கப்படுகிறது.