விஷத்தன்மை கொண்ட மீனை உட்கொண்ட பெண் மரணம் மூன்று பேர் வைத்தியசாலையில்
விஷத்தன்மை கொண்ட மீனை உட்கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 27 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார. விஷத்தன்மை கொண்ட உணவை கொண்ட நிலையில் சுகவீனமுற்றுள்ள 50 வயதான பெண், 19 வயதான இளைஞன் மற்றும் மூன்று வயதான சிறுவன் ஆகியோர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 50 வயதான பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்தவர், மாங்காடு கிராமத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பெண் உட்பட குடும்பத்தினர் மாங்காடு கடற்கரைக்கு சென்றிருந்த போது, மீனவர்கள் தமது வலையில் சிக்கி இருந்த சில மீன்களை வீசியுள்ளதுடன் இவர்கள் அவற்றை பொறுக்கி எடுத்துள்ளனர்.
இந்த மீன்கள் உணவுக்கு உகந்தவை அல்ல என மீனவர்கள் கூறிய போதிலும் அவர்களை அதனை பொருட்படுத்தாது எடுத்துச் சென்றுள்ளனர்.
வீட்டுக்கு எடுத்துச் சென்ற மீனை சமைத்து சாப்பிட்ட பின்னர், அனைவருக்கும் மயக்கம் ஏற்பட்டதை அடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவுக்கு பயன்படுத்த கூடாத மீனை உண்டதன் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குடும்பத்தினர் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகளை களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர்கள் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
