ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம் முள்ளிநியூஸ்

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்


இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் மற்றும் இலங்கையில் இருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 ஐரோப்பா மற்றும் கிழக்கை இணைக்கும் சூயஸ் கால்வாய் ஊடாக பயணிக்கும் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபடும் போது சில காப்புறுதி நிறுவனங்களினால் காப்புறுத்திக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

 இந்த நிலையில், சில காப்புறுதி நிறுவனங்கள் இடர் காப்புறுதி விதிகளை அதிகரித்துள்ளதாக இலங்கையில் உள்ள பிரதான சர்வதேச வர்த்தக நிறுவனம் ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.  

 இதேவேளை, சூயஸ் கால்வாய் ஊடாக பயண நடவடிக்கையினை முன்னெடுக்கும் கப்பல்களின் கட்டணம் 5 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படும் என சூயஸ் கால்வாய் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எரிபொருள், எரிவாயு மற்றும் பயணிகள் கப்பல்களுக்கான கட்டணம் 15 வீதமும், சரக்கு கப்பல்களுக்கான கட்டணம் 5 வீதமும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 இதனிடையே, மோதல் நிலைமை தீவிரம் அடையும் நிலையில் சூயஸ் கால்வாய் ஊடான பயண நடவடிக்கைகள் முற்றாக தடைபட்டு இஸ்ரேலிய வான்வெளி மூடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

 அவ்வாறு நடக்கும் நிலையில் ஆசிய நாடுகளில் இறக்குமதி பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW