தொடரும் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை - இதற்கு தீர்வுதான் என்ன?

இலங்கை, - இந்திய மீனவர் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றாகும்.
ஆனால், அதற்கு இதுவரையிலும் ஒரு நிலையான தீர்வைக் காண முடியாத நிலைமை காணப்படுகிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு - கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்படுகிறது.
ஜனாதிபதிகள் உள்ளிட்ட முன்னைய தலைவர்களால் இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஆராயப்பட்டிருக்கின்ற போதிலும், இரு நாட்டு அரசாங்கங்களும் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்படவில்லை என்பது மீனவர்கள் மத்தியில் காணப்படும் ஒரு மனக்குறையாகும்.
இந்நிலையில், இலங்கை கடற்படை கைது நடவடிக்கை கண்டித்தும் மத்திய, மாநில அரசை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததால் கூறி ஐந்து விசைப்படகும் அதிலிருந்து 37 மீனவர்களின் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனைக கண்டிக்கும் விதமாக இராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் அவசர கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 3ஆம் திகதி ரயில் மறியலில் ஈடுபடுவதாக அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதுடன், இழுவை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
சட்டவிரோத மீன்பிடி செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களையும், அவர்களது இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்திலுள்ள நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்களையும்அவர்களது மூன்று விசைப்படகுகளையும் நேற்றைய தினம் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக கைதான மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 64 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 10 இந்திய இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இரு தரப்பிலும் கைது செய்யப்படும் மீனவர்கள் அவ்வப்போது விடுக்கப்படுகின்ற போதிலும், அவர்கள் தமது மீன்பிடி படகுகளை மீளப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த ஆண்டு இதுவரையில் 170ற்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவ்வாண்டில் மாத்திரம் (ஜனவரி - ஜூலை) சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் 174 இந்திய மீனவர்கள் உள்ளடங்குவதோடு, அவர்களின் 14 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடல் வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான முறைமையைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையே இவர்கள் கைது செய்யப்படுவதற்கான காரணமாகும்.
பராம்பரிய முறைமையிலிருந்து விலகி, இழுவைப்படகு முறைமையை பயன்படுத்துகின்றமையே இந்த பிரச்சினைகளுக்கு வழிவகுகின்றது.
2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் எண்ணிக்கை வருமாறு
மாதம் மீனவர் படகுகள்
ஜனவரி - -
பெப்ரவரி - -
மார்ச் 28 4
ஏப்ரல் - -
மே - -
ஜூன் 31 5
ஜூலை 24 4 -
ஆகஸ்ட் 10 1 -
செம்டெம்பர் 22 3
ஒக்டோபர் 50ற்கும் அதிகமான மீனவர்கள் பதிவாகிய மாதமாக கருதப்படுகின்றது.
கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் எழுந்த பிரச்சினை
1921 ஆம் ஆண்டு இந்திய, - இலங்கை பிரிட்டிஷ் அதிகாரிகள் ஒரு மீன்பிடி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
அதன்படி, இந்திய பகுதியில் அதிகமாக மீனவர்கள் உள்ளதால் பாக்கு நீரிணையில் அவர்களுக்கு அதிக கடல்பகுதியும், இலங்கையில் குறைவான மீனவர்கள் உள்ளதால் அவர்களுக்கு பாக்கு நீரிணையில் குறைவான கடல் பகுதியும் பிரிக்கப்பட்டது.
அதன்படி இந்தியாவுக்கு கச்சத்தீவு உள்ளிட்ட 28 கடல் மைல் பகுதிகளும் இலங்கைக்கு நெடுந்தீவு உள்ளிட்ட 12 கடல் மைல் கடல் பகுதிகளும் பிரிக்கப்பட்டன.
ஆனால், 1974இல் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதால் தமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பறிபோனதாக இந்திய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வசமானதாகவும் ஆனாலும் 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்துப்படி இந்த 500 சதுர கி.மீ. பரப்பளவில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க உரிமையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாக்கு நீரிணை (பாக் ஜலசந்தி) கடல் பகுதிகளில் இந்திய மீனவர்கள் இழுவைப்படகில் இழுவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இந்திய, இலங்கை மீனவர்களிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த பிரச்சினைக்கான தீர்வே தசாப்தங்கள் கடந்தும் இழுபறியிலுள்ளது. பாக்கு நீரிணை கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் இழுவை வலையைப் பயன்படுத்த கூடாது என இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்திய மீனவர்கள் தரப்பில் இதற்கான மாற்று வழியைக் கேட்கின்றனர்.
அதேசமயம் செவிள் வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடையில்லை என இலங்கை மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்மையில் கடிதம் எழுதி உள்ளார்.
தொடரும் இந்த மீனவர் பிரச்சினை காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது என்னவோ மீனவர்களும் அவர்களது குடும்பமும் தான்.
ஆகவே, இவர்களுக்கான தீர்வு ஒன்றை பெற்றுத் தரவேண்டியது இரு நாட்டு அரசியல் பெருந்தகைகளின் கடமை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.