பணிப்பெண்ணாக சவுதி சென்ற இலங்கையருக்கு நேர்ந்த அவலம்!
சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், நாடு திரும்பியுள்ள அப்பெண் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு நடந்த அநீதி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தோட்டத் தொழிலாளியான கலைச் செல்வி கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக அனுப்பப்பட்டுள்ளார்.
றியாத் நகரில் வீடொன்றில் தொழிலுக்காக அமர்த்தப்பட்ட அவர், அன்றைய தினம் இரவே அவ்வீட்டு எஜமானியின் தங்கையுடைய மதீனா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு மூன்று மாதங்கள் தொழில் புரிந்த அவருக்கு இருபதாயிரம் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் இவர் சிறுநீர் அதிக போக்கு நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அடிக்கடி சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
எனினும், அவருக்கு அந்நாட்டு அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் மருத்துவர்களும் சிகிச்சை வழங்க மறுத்துள்ளனர்.
இதன் காரணமாக மீளவும் றியாத் நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். றியாத்திலும் இவருக்கு அடையாள அட்டை பெறும் முயற்சிகள் தோல்வி அடைந்தன.
இதனையடுத்து, இவரை வேலைக்கு அமர்த்திய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு வீட்டு எஜமானி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன அதிகாரி இப்பெண்ணை பலமுறை தாக்கி தனி அறையில் அடைத்துவைத்து துன்புறுத்தியுள்ளார்.
மீண்டும் தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்ற அவ்வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் தடி, இடைபட்டி, செருப்பு என்பனவற்றால் பல நாட்கள் தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW