புத்தளம் கார் விபத்தில் ஆசிரிய ஆலோசகர் ஜாபிர் குடும்பம் காயத்திற்குள்ளானது..!!Photos

புத்தளம் குருநாகல் வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் நான்கு பேர் கடுமையான காயத்துக்கு உள்ளாகியுள்ளதோடு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்..
இச்சம்பவம் சனிக்கிழமை (24) மாலை 04 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் கல்வி பணிமனையின் தமிழ் பிரிவின் பாட இணைப்பாளர் எம்.எம். ஜாபிர், அவரது மனைவியும், புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய ஆசிரியையுமான எம்.எப். மாஹிரா, அவர்களின் புதல்வி ஆயிஷா ஸஹ்தா மற்றும் ஆசிரியை எம்.எப். மாஹிராவின் தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியை இன்சுன் நஹார் ஆகியோரே இந்த விபத்தில் காயமுற்றவர்கள் ஆவர். இவர்களில் ஓய்வு பெற்ற ஆசிரியை இன்சுன் நஹார் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 07 ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஆயிஷா ஸஹ்தா குருநாகலில் நடைபெற்ற தேசிய ரீதியிலான சமூக விஞ்ஞான போட்டியில் கலந்து கொண்டு விட்டு புத்தளம் திரும்புகையில் இவர்கள் பயணித்த சிறிய ரக கார் புத்தளம் வடக்கு கோட்டக்கல்வி காரியாலத்துக்கு அருகில் உள்ள பாரிய கழிவு நீர் கால்வாய்க்குள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பையும் மீறி பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் அமைந்துள்ள புத்தளம் தள வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களின் சாரதிகள் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக தள வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.
விபத்துக்கான காரணம் இது வரையும் தெரியவில்லை. புத்தளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.