இலங்கையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக மேல் மாகாணம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் இந்த மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வருடம் மே மாதமளவில் இந்த பணிகள் நிறைவடைந்ததும், அடுத்த கட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனவும் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடுகளுக்கான ஆரம்பகட்ட நிதி உதவியாக ஒரு மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
திட்டத்தை நிறைவு செய்வதற்கு 300 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.