முஸ்லிம்கள் விரும்பிய இடமெல்லாம் பள்ளிவாசலை நிர்மாணிக்கிறார்கள், நாம் புத்தர் சிலைகளை வைக்கமுடியாதா..?

முஸ்லிம்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் பள்ளிவாசல்களை நிர்மாணித்துக் கொள்கின்றார்களே? ஏன் நாம் விரும்பும் இடங்களில் புத்தர் சிலையை வைத்துக்கொள்ளமுடியாது.
மாணிக்கமடு கிராமத்து மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்குட்படுத்த முடியாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்தார்.
கொழும்பு கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில்நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
மாணிக்கமடு கிராமத்தில் தமிழர்களும் முஸ்லிம்களுமே வாழ்கின்றனர். அங்கு ஒரு சிங்கள குடும்பம் கூட இல்லை. இந்நிலையில் புத்தர் சிலை வைத்திருப்பது இன நல்லிணக்கத்திற்கு பாதகமாக அமையுமல்லவா? எனும் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்;
புத்தரின் சிலையை வைப்பதால் இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படும் என்று எவராலும் கூறமுடியாது. மதங்கள் நல்லிணக்கத்தை கெடுப்பவையல்ல. இது ஒரு பௌத்த நாடு.
இந்நாட்டில் எந்த இடத்திலும் புத்தர் சிலையை வைக்கமுடியும். இதனை எவராலும் தடுக்க முடியாது அது எங்களது உரிமை என்றார்.
இறக்காமம் மாணிக்கமடு கிராமத்தின் மலையுச்சியில் பெரும்பான்மை இனத்தவர்கள் புத்தர் சிலையொன்றினை வைத்து தியான மண்டபம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.