இந்த நாடு எங்க போகுது... ?

நாடு எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதை விழித்திருந்து அவதானித்துக் கொண்டிருக்க வேண்டிய ஒரு யுகம் உருவாகி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
தற்போது நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், தொழிலாளர் சட்டங்களுக்கு மாறாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் ஒருங்கிணைப்பு காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டின் துறைமுகத்தை மட்டுமல்லாது காணிகளையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளதாகவும், ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு கொடுப்பதற்கு தீர்மானித்துள்ள இவர்கள் திருகோணமலை அல்லது காங்கேசன்துறையை யாருக்கு கொடுப்பார்களோ எனத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.
துறைமுகம் இல்லாது போனால் துறைமுக அதிகாரசபை இருக்க முடியாது என்று கூறியஅவர், அவ்வாறு துறைமுக அதிகாரசபை இருந்தால் தொழிலை இழந்த அனைவருக்கும் தான் அதிகாரத்திற்கு வந்த உடனேயே மீண்டும் தொழிலை வழங்குவதாக கூறினார்.
தன்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி சுமத்தி நாட்டை மேலும் நெருக்கடி நிலைக்கு இட்டுச் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.