பஸ் ஊழியர்களின் பிரச்சினை குறித்து இன்று கலந்துரையாடல் முள்ளிநியூஸ்

பஸ் ஊழியர்களின் பிரச்சினை குறித்து இன்று கலந்துரையாடல்


தனியார் பஸ் ஊழியர்களின் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு மற்றும் பஸ் சங்க உறுப்பினர்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சாரதிகள் இழைக்கும் சில தவறுகளுக்கான அபராதத் தொகையை 25,000 ரூபாவாக உயர்த்தியமை தொடர்பில், அதிருப்தி வௌியிட்ட தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி தலையீட்டினால் அந்த பணிப் புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

அத்துடன், பஸ் சங்கங்களுடன் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், அவர்களது பிரச்சினை பற்றி ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

போக்குவரத்து மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள், வாகனப் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரி, மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளரால் நியமிக்கப்பட்ட ஒருவர் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இதன்படி இந்தக் குழுவுக்கும் பஸ் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW