வடக்கு முதலமைச்சருக்கு முல்லை முஸ்லிம்களின் திறந்த மடல் முள்ளிநியூஸ்

வடக்கு முதலமைச்சருக்கு முல்லை முஸ்லிம்களின் திறந்த மடல்



நீதியரசர் திரு. சி. விக்னேஸ்வரன் அவர்கட்கு
முதலமைச்சர், வடமாகாண சபை
கைதடி

ஐயா
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்த ஓர் பகிரங்க மடல்

கடந்த 28.12.2016 புதன்கிழமை அன்று வீரகேசரி பத்திரிகையில் தங்களால் வெளியிடப்பட்ட ‘முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணி வழங்களில் பாரபட்சம் காட்டப்பட்டதென்ற குற்றச்சாட்டு பொய்’ என்னும் தலைப்பிலான அறிக்கையிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணி வழங்கலும் மீள்குடியேற்றமும் என்ற விடயத்தில் பின்வரும் விடயங்களை தங்களுக்கு அறியத் தருகின்றோம்.

தங்களது அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் 416 என்றும் தற்போது மீள்குடியேற்றத்திற்கு விண்ணப்பித்தோர் 739 என்றும் மீள்குடியேற்றப்பட்டவர்கள் 739 என்றும் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் உண்மைநிலை என்னவென்றால் 1348 குடும்பங்கள் 1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற பலாத்கார வெளியேற்றத்தின் முன் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பட்டணம், வண்ணான்குளம், கள்ளப்பாடு, உண்ணாப்புலவு, செல்வபுரம்;, உப்புமாவெளி, கொக்கிளாய், குமுழமுனை, தண்ணீரூற்று, ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டிப கிழக்கு, நீராவிப்பிட்டி மேற்கு, குமாரபுரம், கொத்தியாகும்பன், புதுக்குடியிருப்பு, புளியங்குளம்(ஒட்டுசுட்டான்) மற்றும் முத்தையன்கட்டு ஆகிய பகுதிகளில் வசித்து வந்தனர். (ஆதாரம்: 2015 – கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்)



இதன் விபரங்கள் அனைத்தும் தங்களை சந்திப்பதற்காக 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ம் திகதி காலை 10 மணிக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஜனாப் அய்யூப் அஸ்மின் அவர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட உலமா சபையினரின் தலைமையில் சிலர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, அன்றையதினம் காலையில் தங்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக தாங்கள் கலந்துரையாடலுக்கு வரமுடியாததால், தங்களுடைய பிரத்யோக செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கையை கூடிய சீக்கிரம் தங்கள10டாக அனுப்புவதாகக் எமக்கு தங்களது பிரத்யோக செயலாளரினால் கூறப்பட்டாலும் இன்றுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை. தாங்கள் அப்போது எம்மால் வழங்கப்பட்ட அறிக்கைகளைத் பார்வையிட்டிருந்தால் தற்போது இவ்வாறான தவறான அறிக்கையினை வழங்கியிருக்கமாட்டீர்கள் என்று எமது மக்கள் நம்புகின்றனர். அத்துடன் தாங்கள் நீதியரசராக இருந்தவர் என்பதால் மிக நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்களிடமிருந்து நீதியான நடவடிக்கையை எதிர்பார்க்கின்றனர்.

தங்களின் அறிக்கையின் அட்டவணை 2 இல் 3145 எண்ணிக்கையான 73.02 வீதம் முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இது முழு வட மாகாணத்திற்குமானதா? அப்படியாயின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எத்தனை வீதம் வழங்கப்பட்டுள்ளது? 2010ம் ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் மீள்குடியேறிய நாள் முதல் இன்றுவரை முல்லைத்தீவில், வண்ணான்குளத்தில் வழங்கப்பட்டுள்ள காணிகள் வெறும் 04 மட்டும் தான் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டது என்பதையும் தங்களது மேலான கவனத்திற்கு தருகின்றோம். ஏற்கனவே நாம் அப்பகுதியில் வசித்து அதன் அனுமதிப்பத்திரங்கள் தொலைந்து போனதால் புதிதாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை தயவு செய்து இதில் சேர்க்காதீர்கள். காரணம் இக்காணிகளில் நாம் பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்டதனால் எம்மால் ஆவணங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதே உண்மை.

இவ்வாறான தவறான அறிக்கை தங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது எமக்குத் தெரியவில்லை. இதிலிருந்து தாங்கள் தவறாக வழிநடத்தப்படுவது புலப்படுகிறது. இவ்;வுண்மைகளை தங்களுக்கு அறியத்தருவதுடன் தாங்கள் விரும்பினால் மீண்டும் தங்களை சந்திக்க ஆவலாக இருக்கின்றோம். இக்கடிதத்தில் கீழ்வரும் சமூக அமைப்புகள், பள்ளிவாசல் நிர்வாகம், முதியோர் சங்கங்கள் மற்றும் ஜம்மியத்துல் உலமா சபை (முல்லைத்தீவு கிளை) ஆகியோர் எமது ஒப்பந்தத்தை இடுகின்றோம்.

குறிப்பு: மேலே சொல்லப்பட்ட தொகையினர் மட்டுமல்ல எமது முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் இன்னமும் ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு காணி இல்லை என்பதாலும் வேறுபல காரணங்களாலும் புத்தளத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தவித்துக் கொண்டுள்ளனர் என்பதையும் அறியத் தருகின்றோம்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW