வெளிநாட்டில் இலங்கையர்கள் படும் துன்பங்களை என்னால் தடுக்க முடியாவிட்டால் எனது பதவியை இராஜினாமா செய்வேன்.

வெளிநாடுகளுக்கு சென்று துன்புறுத்தல்களை அனுபவித்து வரும் பணியாளர்களுக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டிய காலம் வந்துள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.
கஹவத்தயில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் சட்டவிரோதமான முறையில் வேலைத்தேடி செல்வோரின் தொகை நாளாந்தம் அதிகரித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு பணிப்பெண்களாக சென்றவர்கள் பலர் பலவித இன்னல்களை முகம் கொடுத்து வருகின்றனர்.
பலர் தமது நகைகள் ,பணம். உட்பட தமது வாழ்க்கையையே தொலைத்து நிற்கின்றார்கள். இதன் காரணமாகவே பலர் நாடு திரும்பியதும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் என்ற வகையில் இதனை தடுக்க வேண்டிய உயரிய பதவி எனக்கிருக்கின்றது.
இதற்காக எனது வேலையையும் இராஜினாமா செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.