வெள்ளத்தால் 10,000 பேர் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக 2,834 குடும்பங்களைச் சேர்ந்த 10,010 பேர் பாதிக்கபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரவிக்கின்றன.
கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை திகிலிவட்டை, பெரில்லாவெளி, குடும்பிமலை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,155 குடும்பங்களைச் சேர்ந்த 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக தரை வழி துண்டிக்கப்பட்ட மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திலுள்ள பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை திகிலிவட்டை, பெரில்லாவெளி, குடும்பிமலை ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியதுடன், நிவாரணங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, கிரான் - புலிபாய்ந்தகல் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதால் பிரதேச செயலக ஊழியர்கள் படகு மூலம் தமது சேவையை முன்னெடுத்து வருகின்றனர்.