"ரவுடித்தனம் செய்வது பௌத்த பிக்குகளே" - கடும்தொனியில் கண்டனம்..!
புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது பௌத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குருந்தூர் மலை காணி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய கூட்டங்களிலும், அதிபர் வவுனியா வந்த போதும் நாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று 400 ஏக்கர் விவசாய நிலத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
தற்போது பௌத்த பிக்குகள் எல்லா விடயங்களிலும் தலையிடுகிறார்கள். எங்களது பிரதேசத்தில் எங்களுக்கு சொந்தமான வயல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நாட்டின் அதிபர உத்தரவிட்ட பின்பு பௌத்த பிக்குகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.
மூலைக்கு மூலை பௌத்த கோவில்களை கட்ட முனைகிறார்கள்.
அதை ஒரு பிரச்சனையாக தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்க முயல்கிறார்கள். இனப்பிரச்சனையில் கூட பௌத்த பிக்குகளின் இனத் துவேசத்தை கக்குபவர்களாக தான் இருக்கிறார்கள்.
புத்தர் அந்தப் போதனையை செய்யவில்லை.
ஆனால் இங்கு ரவுடித் தனம் செய்வதெல்லாம் பௌத்த பிக்குகள். என்னைப் பொறுத்தவரை இந்த காணி விடயத்தில் புத்த பிக்குகள் தலையிடக் கூடாது.
அதிபர் உத்ததரவிட்ட விடயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் அது தான் எமது கோரிக்கை.
இந்த பௌத்த பிக்குகளின் குரல்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்வது எங்களை மலினப்படுத்தும் என்பது தான் எனது கருத்தாகும் எனத் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
