வெளிநாட்டில் தூக்கிலிட்ட இலங்கையர்! உடலை ஏற்க மறுத்த உறவினர்கள்
August 01, 2023
All News
,
Crime
,
Death
,
World
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக குவைத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையரின் உடலை இறுதிச் சடங்குகளுக்காக ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை குவைத்தில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஹல்மில்லேவ, அதிராணிகம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபருக்கே இவ்வாறு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர் தனது பெற்றோருடன் 14 வருடங்களுக்கு முன்னர் பிரியங்கரகம என்ற கிராமத்தில் குடியேறி தனது முதல் மனைவியை பிரிந்து மறுமணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அவர் களுத்துறைக்கு இடம்பெயர்ந்ததாகவும் ஆனால் அவரது முகவரி அவரது உறவினர்களுக்குத் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அனுராதபுரத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் உயிரிழந்தவரின் உறவினர்களை சந்தித்த பின்னர் அவர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை என குவைத்தில் உள்ள இலங்கை தூதுவருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, குற்றவாளியின் தாயாரின் கோரிக்கைக்கு அமைய சடலம் கையளிக்கப்படும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வந்து தாயிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்பதே குறித்த இலங்கையரின் இறுதி ஆசையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW