மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் – மனோ

இது தொடர்பில் தனது முகநூல், எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,
“.. ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் அரசாங்கம் கைது செய்தது.
இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன்.
எல்லாவற்றையும் கடந்து செல்வதைப் போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது.
அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்ளுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் காவல்நிலையத்தில் முறைபாடு செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும்.
அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறையாகும்.
இதைவிடுத்து சண்டியன் போன்றும், மனநோயாளி போன்றும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன் என்று ஹிஸ்டீரியாகாரனாக (hysteria) கூக்குரல் இடுவது எந்த வகையில் நியாயம்?
ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னை
தூற்றிய ராஜாங்கன தேரரை கைது செய்தார்.
இன்று தமிழ் மக்களை கொல்லுவேன், வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன்.
தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன்.
அல்லது இவர் ஒரு மனநோயாளி என மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள்.
சில காலத்திற்கு முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது?
பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுகளை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.
இன்று இந்த அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை ராணுவம் உதவுகிறது.
இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் உண்ணும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி இனவாதமாக பேசி வருகிறார்.
காவல்துறை அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கிறார்.
அதிகாரிகளின் சட்டையை பிடிக்கிறார், தொப்பியை தட்டி விடுகிறார்.
மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார்.
அரச அதிகாரிகளை துர்வார்த்தைகளில் வசைபாடுகிறார். அப்படியானால், இவர் யார்?” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW