சிந்தனை : எதிர் கருத்து பேசினால் எதிரிகளா ? முள்ளிநியூஸ்

சிந்தனை : எதிர் கருத்து பேசினால் எதிரிகளா ?





பொதுவாகவே சமகால மக்களில் பலருக்கும் இலட்சியவாதங்களில் நம்பிக்கை இல்லை.

ஏனென்றால் உண்மையான இலட்சியவாதம் இங்கே பொதுவெளியிலிருந்து காணாமலாகி நெடுநாட்களாகிறது. நம் வழிபாட்டுப்பிம்பங்கள் ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள். அல்லது ஊடகங்கள் உருவாக்கும் கேளிக்கைநாயகர்கள். நாம் எங்கும் காண்பது ஊழல், சுயநலம்.

ஆகவே எவர் எங்கே இலட்சியவேட்கையுடன் செயல்படுவதைக் கண்டாலும் நம்மால் அதை நம்பமுடிவதில்லை. அவருக்கு ஏதாவது சுயலாபம் இருக்கும், இல்லாமல் இப்படிச் செய்வாரா என்றுதான் நாம் யோசிப்போம்.இங்கே எழும் பேச்சுக்களில் பெரும்பாலானவை அத்தகையவைதான்

அவர் அவ்வாறு இலட்சியவாதத்தை வாழ்க்கையாகக் கொண்டிருப்பது உண்மை என்றால் நமக்கு நம் சொந்த சுயநலவாழ்க்கை மீதான விமர்சனமாகத் தெரிகிறது. ஆகவே எரிச்சல் கொள்கிறோம்.

ஏதாவது பழுது இருக்கிறதா என்று நம் மூளை தோண்ட ஆரம்பிக்கிறது. எங்காவது எதையாவது கண்டுபிடிக்கிறோம். அதை எவரேனும் சொன்னால் பாய்ந்துசென்று கவ்விக்கொள்கிறோம்.

‘பாத்தியா நாம் அப்பவே சொன்னேனே, இதெல்லாம் டுபாக்கூர்’ என்று சொல்லும்போது நம் முகத்தில் பெருமிதம் மிக்க இளிப்பு பரவுகிறது. அத்துடன் நாம் நம்பும், ஏற்கும் ஒன்றை அவர் எதிர்ப்பார் என்றால் அதையே காரணமாக ஆக்கி கொலைவெறி கொள்கிறோம். அதன்பின் எந்தவகையான அவதூறுக்கும் தயாராக ஆகிறோம். நம் கீழ்மையை ஒருவகை மூர்க்கமான அறச்சீற்றமாக ஆக்கிக்கொண்டு கூச்சலிடத்தொடங்குகிறோம்.

ஒவ்வொரு குழுக்களின் சிந்தனை மற்றும் கருத்தியலின் ஆதரவும்சரி ,எதிர்ப்பும் சரி, அவதூறும் சரி, உணர்ச்சிவேகமும் சரி பொருட்படுத்தத் தக்கவையே அல்ல. தங்கள் கோஷங்களை அவர் எழுப்பினால் அவர் நல்லவர், இல்லையேல் அவர் எதிரி

நம் முன் உள்ள நேரடியான எளிய கேள்வி இதுதான். சொல்வது எளிது. குறைசொல்வதுமேலும் எளிது. எதையாவது செய்து காட்டுபவர்களே முக்கியமானவர்கள். அவர்களைக் குறைசொல்பவர்களின் தனிப்பட்ட தகுதி என்ன? அதைக்கேட்காமல் மேலே பேசலாகாது. அவர்கள் சொந்த இழிவைக் கடைபரப்புபவர்கள் மட்டுமே.

எதிர் கருத்து பேசினாலும் , கருத்து வேறுபாடு என்றாலும் இவன் என் சகோதரன் என்ற உணர்வு இல்லாதவர்களை கருத்தில் கொள்ளாதீர்கள்.

அவர்களிடம் ஒட்டி வாழும் சமூகத்தில் உயர்ந்த சிந்தனையை அன்பான அரவணைப்பை பெற முடியாது .

இறைவனை நெருங்க செய்யும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொரு தனி மனிதனையும் நிறுத்து எடை போட்டு பார்த்து குறை சொல்லி தீர்ப்பு வழங்கும் இவர்களுக்கு தீர்ப்பு வழங்க தகுதியானவன் இறைவன் என்பதை மறந்து விட்டார்களா இல்லை இம்மையில் இறை அதிகாரத்தில் கைவைக்க துடிக்கின்றார்களா ?

– அபூஷேக் முஹம்மத்- செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW