மட்டக்களப்பில் 10 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கொடுவாமடு முதல் ஊர்காமம் வரையிலான 10 கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை பேரணியாகச் சென்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வரட்சி காலத்தில் நீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் 6 கிலோமீற்றருக்கு அப்பால் சென்றே நீரைப்பெற்றுக்கொள்ளும் நிலையேற்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்.
கரடியனாறு தொடக்கம் மங்களகம வரையிலான பகுதி மக்கள் தொடர்ச்சியான நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் குளிப்பது என்றாலும் பஸ்களில் செங்கலடிக்கு வந்தே குளித்துவிட்டுச்செல்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனை சந்தித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.