வடக்கு கிழக்கில் விகாரை அபிவிருத்தி ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி முள்ளிநியூஸ்

வடக்கு கிழக்கில் விகாரை அபிவிருத்தி ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி


வடக்கு கிழக்கிலுள்ள விகாரைகளில் தங்கியிருக்கும் மதகுருமார்களின் அடிப்படைத் தேவைகளான வதிவிடம், குடிநீர், மின்சாரம், சுகாதார வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

குறைந்த வசதிகளுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட பௌத்த புனருதய நிதியத்துக்கு பெருமளவு நிதி கிடைத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத விகாரைகளின் பட்டியலையும் முப்படையினர் ஊடாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை, கோமரங்கடவல ரங்கிரி உல்பத்த ரஜமகா விகாரையின் புதிய வழிபாட்டுக்கான கட்டிடங்களை சாசனத்துக்கு அர்ப்பணிக்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று (21) பிற்பகல் உரையாற்றும் போதே கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரித் பாராயணத்துடன் இடம்பெற்ற நிகழ்வில் பங்குபற்றியதுடன் பிரதேசத்தின் ஐந்து விகாரைகளுக்கு பூஜா பூமி உறுதி ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கும் ஊட்டமழிப்பதற்கும் தற்போதய அரசு கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பில் பௌத்த மதம் தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு பிரிவும் அகற்றப்படமாட்டாதென்பதுடன் அரசாங்கத்தை அரசியல் ரீதியில் எதிர்ப்போர் இது தொடர்பில் முன்னெடுத்துவரும் பொய்ப் பிரச்சாரங்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் தெரிவித்தார்.

அமரபுர ஸ்ரீ சத்தர்மவங்ஸ பிரிவின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய அகுங்கல்லே ஸ்ரீ சீலவிசுத்தி நாயக்க தேரர் உட்பட பௌத்த மதகுருமார்கள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோரும் பாதுகாப்பு படை உயரதிகாரிகளும் நிகழ்வில் பங்குபற்றினார்கள்.

திருகோணமலை வில்கம் ரஜமகாவிகாரையின் விகாராதிபதி அமரபுர பிரிவின் கிழக்கு, தமன்கடுவ பிரிவுகளின் பிரதான சங்கநாயக்கர் வணக்கத்துக்குரிய அம்பிற்றியே ஸ்ரீ சீலவங்ஸ நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் இன்று பிற்பகல் அந்த விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அவரை சந்தித்து நலன் விசாரித்ததுடன் மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW