ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளில் ஆபத்தான வாயுக்கள் முள்ளிநியூஸ்

ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளில் ஆபத்தான வாயுக்கள்


மின்னூட்டம் (Charge) செய்து பயன்படுத்தக்கூடிய சாதனங்களால் ஏற்படும் பாதகங்களை பலர் அறிந்திருப்பதில்லை.

இவ்வாறு மின்னூட்டமேற்றி (சார்ஜ்) பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போன்கள், டெப்லட்களில் உள்ள பேட்டரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அபாயகரமான வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தீப்பற்றுதல் மற்றும் வெடித்தல் போன்ற பாதகங்களை மட்டுமே பாவனையாளர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், அவற்றிலிருந்து வெளியாகும் நூற்றுக்கணக்கான நச்சு வாயுக்கள் தோலில் அரிப்பு, கண்களில் பாதிப்பு மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

மின்னூட்டமேற்றிப் பாவிக்கக்கூடிய பேட்டரிகளில் உள்ள லித்தியம் மற்றும் கார்பன் மோனாக்சைட் போன்றவற்றினால் இந்த நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக அமெரிக்காவின் NBC Defence மற்றும் சீனாவின் Tsinghua பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட்களைப் பயன்படுத்துவோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளில் இருந்து வெளியாகும் நூற்றுக்கும் மேற்பட்ட அபாயகரமான வாயுக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இவை வெப்பமடையும் போதும், சேதமடைந்த அல்லது நீண்டகாலம் ஆன பேட்டரிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் போதும் இந்த நச்சுவாயுக்கள் வெளியேறுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த பேட்டரிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, 50 சதவீதம் மின்னூட்டம் ஏற்றினாலே அதில் இருந்து நச்சு வாயுக்கள் வெளியேறத் துவங்கி விடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW