கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு பதில் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக ஆளுநர் அறிவிப்பு

(இஹ்ஸானா- பரீத் )
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அறிவித்தலுக்கு முரணாக நடத்தப்பட்ட பொது அறிவு வினாத்தாள் இரத்துச் செய்யப்பட்டு பதில் பரீட்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சையில் அறிவித்தலுக்கு முரணான முறையில் பொது அறிவு வினாத்தாள் அமைந்திருந்தது.
இதனால் அறிவித்தல்படி பரீட்சைக்குத் தயாரான பட்டதாரிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
அது குறித்து தமது விசனத்தை வெளிப்படுத்தியதோடு இம்ரான் மகரூப் எம்.பியின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.
அவர் இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு உடன் கொண்டு வந்தார்.
அதற்கு அனுப்பியுள்ள பதிலிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இப்பரீட்சை இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்தார்.