போட்டி போட்டு ஓடிய பஸ்கள்.. பாலத்தில் புரண்டதால் பயணிகள் அதிஷ்டவசமாக தப்பினர். முள்ளிநியூஸ்

போட்டி போட்டு ஓடிய பஸ்கள்.. பாலத்தில் புரண்டதால் பயணிகள் அதிஷ்டவசமாக தப்பினர்.


யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார், மற்றும் அரச பஸ்கள், மன்னார் பிரதான பாலத்தில் போட்டி போட்டு ஓடியதன் காரணமாக ஏற்பட்ட விபத்தின் போதும் பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று இரவு 7.05 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை(25) மாலை 4.50 மணியளவில் தனியார் பஸ், அதனைத்தொடர்ந்து சுமார் 40 நிமிட இடை வெளியில் அரச பஸ் என்பன மாலை 5.30 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி புறப்பட்டுள்ளன.

இரண்டு பஸ்களும் சில மணி நேரங்களில் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு போட்டி போட்டு மன்னாரை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. பின்னால் வந்த அரச பஸ், முன்னால் சென்ற தனியார் பஸ்ஸை முந்தியடித்துக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளது.

தனியார் பஸ்ஸில் 7 பயணிகள், யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துள்ளனர். மன்னார் பிரதான பாலத்தில் அரச மற்றும் தனியார் பஸ்கள், ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு செல்ல முற்பட்ட போது இரவு 07.5 மணியளவில் தனியார் பஸ், பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில், தனியார் பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் நடத்துனரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மன்னார் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் அரச மற்றும் தனியார் பஸ்களுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு வருகின்றமையினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW