10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் சிக்கினர் (Photo) முள்ளிநியூஸ்

10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் சிக்கினர் (Photo)


சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை மட்டக்களப்பு கல்குடாவில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து பொத்துவில் பாணமை சாஸ்திரவெல விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எம்.ஐ.இப்றாஹீம் தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த நபர்களைக் கைது செய்துள்ளதுடன் வலம்புரி சங்கையும் கைப்பற்றியுள்ளனர்.



விசேட அதிரடிப்படை கிழக்குமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.எம்.ஆர்.லெத்தீபின் பணிப்புரையின் பேரில் அதிரடிப்படை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கேசர ரத்னவீரவின் வழிகாட்டலில் விசேட அதிரடிப்படை வீரர்கள் குழு சுற்றிவளைத்து நடாத்திய தேடுதலில் கல்குடா விஷ்ணுகோயில் வீதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓன்றரை அடி நீளமான இவ்வலம்புரி சங்கு மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.



குறித்த வலம்புரி சங்கினையும் கைதுசெய்யப்பட்ட நபர்களையும் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாரி என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேநநபர்கள் மாத்தளை வாழைச்சேனை பொலநறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW