நீதிமன்ற உத்தரவை மீறிய 37 போராட்டக்காரர்கள் கைது

மின்சார சபையில், தற்காலிக அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட குறித்த ஊழியர்கள், ஆனந்த குமாரசுவாமி வீதியிலுள்ள மின்சக்தி மற்றும் மீள்புதுப்ப்பிக்கத்தது அமைச்சின் முன்னால் நேற்றைய தினம் (24) இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தங்களை நிரந்தரமாக்க கோரியே அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வீதியை மறிக்கும் வகையில் இடம்பெற்ற போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக தெரிவித்து, குறித்த இடத்தைவிட்டு அகலுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவை மீறி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்தே, குறித்த 37 பேரும் நேற்று (24) இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
குறித்த நபர்கள், கொள்ளுபிட்டி. பொரளை, கிருளப்பனை, வெள்ளவத்தை, நாராஹேன்பிட்ட, பம்பலபிட்டிய, கறுவாத்தோட்டை ஆகிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டு அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் இவர்களை இன்றைய தினம் (25) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.