மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு.!
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல்வாங்கல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி புலனாய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர், மேல் நீதிமன்ற நீதியரசர்; மற்றும் கணக்காய்வு நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய 3 பேர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் விதந்துரைகளுடனான அறிக்கை மூன்று மாதத்தினுள் நிறைவுசெய்யப்படும்.
ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வெற்றிபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி தொடர்புடைய தரப்புக்களிடம் கோரியுள்ளார்.