இஸ்லாம் கூறும் விடயம், எனக்கு நன்கு தெரியும் - மஹிந்த
முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் கூட்டமொன்று குருநாகல் மல்லவப்பிட்டியவில் முன்னாள் குருநாகல் பிரதேச சபை உறுப்பினர் அமானின் ஏற்பாட்டில் முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இன்று இலங்கை மக்கள் 69 ஆவது சுதந்திர தினத்தை மிகவும் மனவருத்தத்துடன் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டின் சுதந்திரத்தை சிங்களவர் மட்டுமல்ல, முஸ்லிம்களும் தமிழர்களும் மற்றும் ஏனைய சமூகத்தினர்களும் சேர்ந்துதான் பெற்றார்கள்.
இவற்றை நாங்கள் மறக்க முடியாது. இன்று இரவில் சுதந்திரமாக கூட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றோம். நாட்டில் பயங்கரவாதம் இருந்தால் இப்படியான கூட்டத்தை நடத்த முடியுமா? இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சிங்கள இனத்தவர் மட்டும் உயிர்த் தியாகம் செய்யவில்லை. பங்களிப்பு செய்த முஸ்லிம்களையும் ஏனையோரையும் மறக்க முடியாது.
நாங்கள் நடத்திய போராட்டம் தமிழர்களுக்கு எதிராகவோ ஏனையோர்களுக்கு எதிரானதோ அல்ல. அது பயங்கரவாதத்திற்கு எதிரானதாகும். இன்று அதைவிட மிகவும் மேலானதொரு யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. அந்த யுத்தம் மக்களின் பட்டினிக்கு எதிரான யுத்தமாகும்.
எமது நாட்டில் என்னுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் மிகவும் சந்தோசமாக இருந்தார்கள். இன்று இந்த நாட்டில் சிங்களவர்களுடைய பொருளாதாரம் மட்டுமல்ல, முஸ்லிம்களுடைய வியாபாரங்களும் வீழ்ச்சி கண்டுள்ளன.
அத்துடன், சூழ்ச்சிகரமான முறையில் முஸ்லிம்களை என்னிடமிருந்து பிரித்தார்கள். என்னோடு இருந்த ஓரிருவர் செய்த தவறின் காரணத்தினால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தினதும் வெறுப்புக்கு உள்ளாகினேன். அதன் பிரதிபலன்தான் ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பின்னரான பொதுத் தேர்தலிலும் அடைந்த தோல்வி.
எனக்கு இஸ்லாம் கூறும் விடயம் நன்கு தெரியும். அசத்தியம் நிச்சயமற்றது .
ஒரு நாளைக்கு நிச்சயம் சத்தியம் வெல்லும் என்பதை நான் அறிந்துள்ளேன். என் முன்னால் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் திரண்டு வந்து நிற்பதைப் பார்க்கும் போது இன்று சத்தியம் உண்மை வெல்லப்பட்டதாக நான் உணர்கின்றேன்.
என்னுடைய எதிர்கால ஆட்சியில் இந்த நாட்டு முஸ்லிம்களையும் ஏனைய சமூகங்களையும் இந்த நாட்டில் ஒரு கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்குரிய சூழலும் சுபிட்சமும் நிரந்தரமாக வழங்கப்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.