முஸ்லிம் சமூகம் தனக்கிருக்கும், அச்சுறுத்தல்களை புரியாது தூங்குகிறது - அமீன் சீற்றம்

பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறை முன்னாள் தலைவரும் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவருமான கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் எழுதிய ' முஸ்லிம் அரசியல் முன்னோடி- அறிஞர் சித்திலெப்பை' நூல் வெளியீட்டு விழா மற்றும் அவர் பற்றிய ஆவணப்படம் இறுவட்டு வெளியீடு என்பன கெட்டம்பே ஓக்ரே ரீஜன்சி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இன்றைய அரசியலில் முஸ்லிம் கட்சிகள் தனித்துவம் என்ற பெயரில் முஸ்லிம் எனும் அடையாளத்துடன் செயற்பட்டு வருகின்றன. ஆனால் இக்கட்சிகள் தேசிய விடயங்களில் அக்கறையின்றி தனியே முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் மட்டும் அக்கறை காட்ட முற்படுவது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சிந்திக்கத்தக்கதாகும்.
நாட்டின் தேசிய விவகாரங்களில் நீதி நியாயமான நிலைப்பாடுகளை முஸ்லிம் சமூகம் சார் அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும். இதனைத் தான் பெரும்பான்மை சமூகம் எதிர்பார்க்கின்றது. இதற்கான முன்மாதிரியை அறிஞர் எம்.சி. சித்திலெப்பை முன்வைத்திருந்தார். இதனால் அறிஞர் எம்.சி. சித்திலெப்பை தனியே முஸ்லிம் சமூகத்திற்குரியவராக அன்றி சகல சமூகங்களுக்கும் உரியவராக கருதப்படுகின்றார்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கையில் விருந்தாளிகள் போல் வாழ்ந்து விட்டுப் போக முடியாது. நாட்டின் பொருளாதார , சுகாதார , சூழல் உட்பட சகல சமூகப் பிரச்சினைகளிலும் முஸ்லிம் சமூகம் பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும். நாட்டின் அபிமானமிக்க பிரஜைகளாக எம்மைக் காட்ட வேண்டும். அறிஞர் எம்.சி. சித்திலெப்பை சகல மதத்தவர்களுடனும் இணைந்து செயற்பட்டார். இதனால் தான் அறிஞர் எம்.சி. சித்திலெப்பை பற்றி பேசப்படும் போது ஆறுமுக நாவலர் , அநாகரிக தர்மபால ஆகியோர் பற்றியும் பேசப்படுவதைக் காணலாம்.
முஸ்லிம் சமூகம் 150 வருடங்களின் பின்பு அறிஞர் எம்.சி. சித்திலெப்பைக்கு நன்றிக்கடன் செலுத்த முன்வந்திருப்பது கவனத்திற்குரியதாகும். கண்டி வாழ் முஸ்லிம்களால் மட்டுமல்ல இலங்கை முஸ்லிம்களால் நினைவுபடுத்தப்பட வேண்டிய தலைவர் அறிஞர் எம்.சி. சித்திலெப்பை ஆவார். இலங்கையின் அரசியலில் முக்கியத்துவமிக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் இக்காலப்பகுதியில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகள் எத்தகைய பாணியில் அமைய வேண்டும் என்பதை அறிஞர் எம்.சி. சித்திலெப்பையின் அரசியலை ஆழமாக நோக்குவதன் மூலம் கற்றுக் கொள்ள முடியும்.
இந்நாட்டின் சகல மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் தான்சார்ந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளுக்காகவும் அறிஞர் எம்.சி. சித்திலெப்பை போராடினார். அவரது சமூக , அரசியல் பங்களிப்பு காத்திரமானது. ஆனால் அவருக்கு அரசியலில் உரிய இடம் கிடைக்கவில்லை. இது நடைமுறை அரசியலுக்கும் பொருந்தும். அறிஞர் எம்.சி. சித்திலெப்பையின் வரலாற்றைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், முஸ்லிம் சமூகம் துரதிஸ்டவசமாக தனது வரலாற்றைப் பேணிப் பாதுகாப்பதில் அக்கறையற்றிருப்பது கவலைக்குரியதாகும்.
இன்று அறிஞர் எம்.சி. சித்திலெப்பை பற்றி முஸ்லிம் மாணவர்கள் தெரியாத நிலையிலுள்ளனர். அவரின் பெயரில் காணப்படும் பாடசாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறுகின்றவர்கள் எம் மத்தியில் உள்ளனர். அதேபோல் கலாநிதி பதியுதீன் மஹ்மூதும் அளப்பரிய சேவையாற்றினார். ஆனால் இன்றைய முஸ்லிம் இளைய தலைமுறையினர் பதியுதீன் மஹ்மூத் என்பவர் யார்? டீ.பி.ஜாயா யார்? என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாம் இவர்களைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூற வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தைச் சுற்றி இனவாதம் வலை பின்னிக் கொண்டிருக்கின்றது. இந்த சமூகத்தை அடக்கி ஒடுக்க சதிகள் இடம்பெற்று வரும் நிலையில் முஸ்லிம் சமூகம் தனக்கிருக்கும் அச்சுறுத்தல்களை புரிந்து கொள்ள முடியாத சமூகமாக தூங்கிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கு ஒரு இலத்திரனியல் ஊடகம் அவசியம்.
தம்புள்ள நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றில் பேர்கர் பணிஸ் தொடர்பாக ஏற்பட்ட சிறு பிணக்கைத் தொடர்ந்து 28 காடையர்கள் 98 முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூன்று தினங்கள் மூடச் செய்தனர். இச்சம்பவம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை மூன்று தினங்கள் முடக்கியது. இது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்துகின்றது. முஸ்லிம் சமூகம் நெருக்கடிகளை எதிர்நோக்கும் சமூகமாக மாற்றப்படும் அவல சூழ்நிலை தொடர்கின்றது. இந்நிலையில் இருந்து ஒரளவுக்கேனும் விடுபடுவதற்கு ஊடகத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியும். ஆனால் எம்மத்தியில் சக்திமிக்க ஊடகமொன்று இல்லாமை பெரும் குறைபாடாகும்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்மாதிரியான தலைவராக அறிஞர் எம்.சி. சித்திலெப்பை திகழ்ந்தார்கள். அவர் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடியுள்ளார். இன்றைய பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் சமூகத்திற்காக இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் பராளுமன்றத்தில் உரையாற்றாத உறுப்பினர்களும் இருக்கின்றனர்.
நாம் கடந்த இரண்டரை வருடங்களாக 250 மௌலவி ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோம். இந்த ஆசிரிய நியமனங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பிட்ட விடயம் என்பதும் சுட்டிக்காட்டத்தக்தாகும். எனவே சமூகத்திற்காக குரல் எழுப்பக்கூடியவர்களை சமூகம் பிரதிநிதிகளாக உருவாக்க வேண்டும் என்பதை அறிஞர் எம்.சி. சித்திலெப்பையின் அரசியல் வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
(-எம்.எம்.எம்.ரம்ஸீன், இக்பால் அலி )