வடக்கு, கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டம்: பொலிஸாருடன் முறுகல்
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வேலையற்ற பட்டதாரிகள், அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்கும் நோக்கில், ஆர்ப்பாட்டப் பேரணியாக மாவட்ட செயலகத்திற்குச் சென்றனர்.
வேலையற்ற பட்டதாரிகள் மாவட்ட செயலகத்திற்குள் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்த பொலிஸாருடன் முறுகல் நிலை ஏற்பட்டது.
மாவட்ட செயலகத்திலிருந்து கலைந்து சென்ற வேலையற்ற பட்டதாரிகள், தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைத்தீவு சுகாதார அலுவலகத்திற்கு அருகில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்நிலையில், வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இரவு பகலாக இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.