கம்பளை பிரதேசத்தில் விழுந்த இடி.. ஒருவர் பலி. நால்வர் படுகாயம்.

கம்பளை நகரை அண்டிய கம்பளைவெல மற்றும் கொப்பேவெல ஆகிய இரு இடங்களில் நேற்று (07) மாலை 4 மணியளவில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்குதல்களில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பெண்னொருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது, இடி மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது.
இதில், இரு பிள்ளைகளின் தந்தையான கயான் பிரியந்த என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏனைய இருவரும் காயமடைந்த நிலையில், கம்பளை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கம்பளை, மஹர கொப்பேவெல பகுதியில் வீடொன்றில் இடி, மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவன் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளார்.
இவர்களும், கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.