புலிகளுக்கு ஆதரவு எனக் கூறி மஹிந்தவால் பறிமுதல் செய்யப்பட்ட கட்டடத்தை மீள ஒப்படைக்கவும்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தை பறிமுதல் செய்ய, அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ரத்து செய்துள்ளது.
இதன்படி பயங்கரவாத புலனாய்வு பிரிவு இந்த கட்டடத்தை எட்டு வாரங்களுக்குள் அதன் உரிமையாளரிடம் கையளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டடத்தை பறிமுதல் செய்ய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் எடுத்த தீர்மானத்தினை எதிர்த்து, அதன் உரிமையாளர்களான சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் சண்முகம் சிவராஜா மற்றும் சிவராஜா சரோஜினி தம்பதிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
தங்களுக்கு சொந்தமான இந்த கட்டடத்தை விடுதலை புலிகளுக்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி வாங்கியதாகவும் அங்கு விடுதலை புலிகளுக்கு உதவும் மருத்துவமனையை நடத்தியதாக குற்றஞ்சாட்டி பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணையை ஆரம்பித்ததாக மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
மனுவை ஆராய்ந்த நீதிபதிகள் அவசரரகால சட்டத்தின் கீழ் இந்த கட்டிடத்தை பறிமுதல் செய்யும் அளவிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் அதனை பறிமுதல் செய்வதற்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக் ஷ பிறப்பித்த உத்தரவு சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என்றும் தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த நடவடிக்கையால் மனுதாரர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.